Monday, May 5, 2014

விலகல்


அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

- எம். ரிஷான் ஷெரீப் 

# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014 , எதுவரை இதழ், வல்லமை இதழ், காற்றுவெளி இதழ், பதிவுகள் இதழ், இன்மை இலக்கிய இதழ்

2 comments:

பூமகள் said...

அருமை..

"அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்"

இவ்வரிகள் எத்தனை ஆழமாய் சென்றவரை அனுப்பியவர் கண்டிருப்பார் என்பது தெரிகிறது.. அவர்களின் உறவாழம் புரிகிறது..

ரசித்தேன் ரிஷான். வாழ்த்துகள்..!

பூமகள் said...

அருமை..

"அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேருந்திலிருந்து இறங்கினாய்"

இவ்வரிகள் எத்தனை ஆழமாய் சென்றவரை அனுப்பியவர் கண்டிருப்பார் என்பது தெரிகிறது.. அவர்களின் உறவாழம் புரிகிறது..

ரசித்தேன் ரிஷான். வாழ்த்துகள்..!