Sunday, June 15, 2008
துயர் துடைக்கும் விரல்கள் கொடு !
இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...
அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !
தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!
மாய உலகின் கரங்களை விலக்கி
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்
தூதனுப்புகிறேன்
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்
குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!
சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !
அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Sunday, June 1, 2008
என்னைத் தொலைத்த நான்...!
யுத்தப் பெருவெளியொன்றின்
விஷக்காற்றினைச் சுவாசித்தபடி
பேருவகை ஏதுமற்ற வாழ்வின்
கடைசிச் சொட்டில் உயிர் வழிய
காற்றின் துவாரங்களெங்கிலும்
ஒழுகும் எனது பாடல்கள்
துயரத்தைச் சோர்கின்றன !
எனது கழுத்தை நெரிக்க
நீளும் கைகள்
எனது நண்பனுடையதாக இருக்கின்றன,
எனது சுவாசம் பறித்துக்
காறியுமிழும் வாயும் அவனுக்கிருக்கிறது,
சுயநலத்தின் உள்ளங்கை
அவன் தலைதடவி
எனை நோக்கி அனுப்பியிருக்கிறது
அவன் உறிஞ்சி விழுங்கிச் சிரிக்கும்படியாகவே
என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது !
ஒரு காலம் இருந்தது,
அன்று நாம் அழகாயிருந்தோம்,
இனிமையான பாடல்களும்,
தென்றலும்,வாசனையும்
எம்மைச் சூழ்ந்திருந்தது
எந்தவித அச்சங்களுமற்று
கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்
நானுமவனும் மட்டும்
நடைபயின்று களிப்புற்றோம் !
ஒன்றான ரசனை எமை இணைத்த
நாட்களின் முடிவில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவனானான்
அப்பொழுதுதான் முதன்முதலாக
அவன் ஆயுதம் எனை நோக்கி நீண்டது !
நட்பின் இறுதிச் சொட்டு
நயவஞ்சகத்தைக் கோர்த்துவந்தது,
எனைக் கொல்லத் தேடிவந்தது தெரியாமல்
என் தாய் அவனுக்கு உணவிட்டாள் !
எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ?
ஓடிச் சோர்ந்து,தவித்து,நின்று
பாலைநிலமது
பாதங்களை விழுங்கிக்கொள்ள,
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்
என்னையே தொலைத்த
நானாகி நிற்கிறேன் பார்..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Posts (Atom)