Thursday, November 22, 2007

பேய் மழை ...!














சட்டென்று வந்த மழை
சடசடத்துப் பெய்த மழை !

வற்றிவாடி வதங்கி
வசந்தமிழந்த காலங்களில்
வாராதிருந்த மழை
வரவேற்றும் தூறாதிருந்த மழை !

இப்போது வந்திங்கு
இடைவிடாது பெய்யும் மழை ;
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல
இதயங்களை நிறுத்தும் மழை !

கோழிகுஞ்சையெல்லாம்
கொத்தோடு நனைத்த மழை ;
கொட்ட வந்த தேளைக்கூட
கொல்லாமல் விட்ட மழை !

மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்
மிதக்க விட்ட மழை - அதனை
மிதித்த உயிர்களையெல்லாம்
மேலோகம் சேர்த்த மழை !

தொற்று நோயையெல்லாம் - தன்
தோளில் தூக்கி வந்த மழை
வற்றிய உடலோடு போய்
வைத்தியரை வாழவிட்ட மழை !

மரங்களை முறித்துப்போட்டு
மண்சரித்து வந்த மழை - பெரு
விருட்சங்களை விழவைத்து
வீடழித்துப் பெருத்த மழை !

அகதியென்ற காரணத்தால்
சொந்தமிழந்து சொத்திழந்து
சுகமிழந்து சுவடிழந்து
சுயமிழந்து வந்த இடத்தில்

கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்
கைவீசி வந்த மழை
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை
களவாடிப்போன மழை !

பாதையோரங்களில்
படுத்துக் குமுறியவரை
பதறவைத்த மழை ;
விதியை நொந்தவாறே
விம்மிக்கிடந்தவரை
விரட்டியடித்த மழை !

சட்டென்று வந்துள்ள மழை
சடசடத்துப் பெய்யும் இப்பேய் மழை...!

-எம்.ரிஷான் ஷெரீப்
மாவனல்லை
இலங்கை.

No comments: